பிரதமரின் கொள்கையான ” ஒரே மலேசியா” மையமாய் கொண்டு எழுதப்பட்டிருக்கும் நாவல் இண்டர்லோக்காகும். அப்படியானால் “ஒரே மலேசியா”வில் இந்தியர்கள் என்ன “தாழ்ந்த சாதியினராக” அதாவது ” பறையராக” தெரிகின்றோமா என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ மிக ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்.
மலேசிய நாட்டின் மக்களின் ஒற்றுமையை மையமாக கொண்டு எழுதப்பட்டிருக்கும் நாவல் இது; இந்நாவல் மலேசிய மக்களின் ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்;அதிலும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு முன்னோடியாக இருக்கும் என்றெல்லாம் இண்டர்லோக் நாவலாசிரியர்/எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்நாவளோ அவ்வாறு செய்வதில் தோல்விக் கண்டுள்ளது. மக்களிடையே இனவாதத்தை தூண்டும் வகையில் வார்த்தைகளும் குறிப்பிட்ட ஒரு தமிழ் சாதியினரை தீண்டத்தகாதவர்கள் என இழிவுப்படுத்தியிருப்பது பொது மக்களின் மிக முக்கியமாக இந்தியர்களிடையே மனக்கசப்பை உண்டாக்கியுள்ளது என சார்ல்ஸ் தெரிவித்தார்.
2020 நோக்கிக் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் இந்தியர்களிடையே சாதிக் கொள்கைகள் மாறி மறந்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் உணர்ச்சித் தூண்டக் கூடிய இவ்வார்த்தைகளை நாவலில் உபயோகித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியர்களையே சிறுமைப்படுத்தியும் இழிவுப்படுத்தியும் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள் இந்தியர்களின் தரத்தை தாழ்மை படுத்துவதற்காகவே உள்ளதுப் போல் தெரிகிறது.
இந்தியர்களின் சரித்திரப் புகழ்களை எடுத்துறைக்க பல விஷயங்கள் இருக்கும் போது தேவை இல்லாமல் சாதிகளும் அதன் கதைகளும் மாணவர்களிடையே பிளவை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
அதுமட்டுமின்றி, இந்நூல் பாட நூலாக வந்தால் மற்ற மாணவர்களிடையே அல்லது மற்ற இனத்தவரிடையே மார் தூக்கி கொண்டு நடக்க வேண்டிய நாமும் நம் பிள்ளைகளும் தலை குனிந்து போகும் அவல நிலை ஏற்படும்.
தமிழர்களின் சாதியைப்பற்றியும் சரித்திரத்தைப்பற்றியும் சரியாக புரியாமல் எழுதியிருக்கிறார் நாவலாசிரியர். எழுதியவருக்கே சரியாக புரியவில்லை என்றால் பாடம் போதிக்கும் ஆசிரியர்களும் மாணவர்களும் எப்படி புரிந்துக் கொள்ள முடியும் என சார்ல்ஸ் கேள்வி எழுப்பினார்.
ஆகவே, புரியாத புதிராக இருக்கும் இந்நாவலும் இக்கதையும் உடனே அகற்றப்படவேண்டும்; மாணவர்களின் போதனைக்காக பயன் படுத்தக் கூடாது என சார்ல்ஸ் கேட்டுக் கொண்டார்.
Tiada ulasan:
Catat Ulasan